தீபாவளி பண்டிகைக்கு இந்தாண்டு 20% போனஸ் வழங்க வேண்டும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு இன்னும் வெளியிடவில்லை.
தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 9 தொழிற் சங்கங்கள் சார்பில் போக்குவரத்துத் துறை செயலருக்கு சமீபத்தில் கடிதம் அனுப்பப்பட்டது. அதில் இந்தாண்டு போக்குவரத்துத் துறை பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு 2004 முதல் ஒவ்வொரு ஆண்டும் 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கொரோனா பொதுமுடக்கம் காரணமாக 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் 10 சதவீதமாக போனஸ் தொகை அறிவிக்கப்பட்டது. அப்போதைய சூழலை உணர்ந்து அரசு மற்றும் நிர்வாக நலன் கருதி ஊழியர்கள் அதை பெற்றுக் கொண்டனர். 2022ஆம் ஆண்டும் 10% போனஸ் தொகை வழங்கப்பட்டதால் தொழிலாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இன்னும் போனஸ் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் கடந்த 3 ஆண்டுகளைப் போல் கடைசி நேரத்தில் 10 சதவீதம் தொகை மட்டுமே போனஸாக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அக்டோபர் 30, 31, நவம்பர் 1 ஆகிய மூன்று நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடத்த போக்குவரத்து ஊழியர்கள் முடிவெடுத்துள்ளனர். இதனால் 1,500 பேருந்துகள் வரை இயங்காது என்கிறார்கள்.