மும்பை நகரில் தட்டம்மை பாதிப்பு அதிகளவில் பரவி வரும் நிலையில், புதிதாக 30 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் 156 பேருக்கு புதிதாக தட்டம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் இதுவரை மும்பையில் 233 பேருக்கு தட்டம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 8 மாத ஆண் குழந்தை தட்டம்மைக்கு செவ்வாய் கிழமை மாலை உயிரிழந்த நிலையில், மும்பையில் தொற்றுக்கான மொத்த உயிரிழப்பு 12 ஆக உயர்ந்துள்ளது. அந்த குழந்தைக்கு கடந்த 20ஆம் தேதி உடல் முழுவதும் தட்டம்மை பரவியிருந்தது. இதனைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக மும்பை மாநகராட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. ஆனால், ஒரு சில மணிநேரத்திலேயே செவ்வாய் கிழமை மாலை உயிரிழந்துள்ளது.

எனினும், பிரேத பரிசோதனைக்கு பின்னரே காரணம் பற்றி முடிவு செய்யப்படும் என அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கின்றது. மும்பையில் கஸ்தூர்பா, சிவாஜி நகர், பாபாசாகேப் அம்பேத்கர், ராஜாவாடி, சதாப்தி, குர்லா பாபா, சாவித்திரி புலே, செவன் ஹில்ஸ் ஆகிய 8 மருத்துவமனைகளில் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மும்பையில் இந்த ஆண்டில் தொற்று ஏற்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்களின் எண்ணிக்கை 3,534 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் புதிதாக 156 சந்தேக நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு காய்ச்சல் மற்றும் தட்டம்மை தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி மும்பை மாநகராட்சி, காய்ச்சல், தொற்று ஏற்பட்டவர்களுக்கு வைட்டமின் ஏ இரண்டு டோஸ்கள் கொடுக்கப்படுகின்றன. 24 மணிநேரத்திற்கு பின்னர் 2-வது டோஸ் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.