இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து தென் கிழக்கில் 1326 கி.மீ. தொலைவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.2ஆக பதிவாகியுள்ளது. கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பெரும் சேதம் இருக்காது என தெரிகிறது. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இதற்கிடையே இலங்கையில் இன்று (நவ.14) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழ்வு காரணமாக மழைப்பொழிவு அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நில அதிர்வுக்கான தேசிய மையம் தனது எக்ஸ் பக்கத்தில், கொழும்புவுக்கு தென் கிழக்கே 1326 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், மதியம் 12.31 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.