நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் நிர்வாகி வி.எம்.சுதாகர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
நடிகர் ரஜினிகாந்தின் மக்கள் மன்ற நிர்வாகியாக இருந்தவர் வி.எம்.சுதாகர். இவர் ரஜினியின் தீவிர ரசிகர், அவரது நெருங்கிய நண்பரும் கூட. இவர் கடந்த மாதங்களாக சிறுநீராக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரது சிகிச்சைக்கு ரஜினிகாந்த் எந்த உதவியும் செய்யவில்லை என்ற தகவல் கூட சமூக வலைதளங்களில் பரவியியது. இதற்கு, உண்மையில் எனது சிறுநீரகப் புற்றுநோய் சிகிச்சைக்கான கடந்த ஒரு வருட மருத்துவச் செலவு முழுவதையும் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் பார்த்துக் கொண்டவர் தலைவர். இப்போது வரை அவர் மட்டுமே நிதி மற்றும் தார்மீக ஆதரவை வழங்குகிறார். அதற்காக எங்கள் முழு குடும்பமும் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என்று சுதாகர் அப்போது கூறியிருந்தார்.

ரஜினி மக்கள் இயக்கத்தை பல ஆண்டுகளாக கவனித்து வந்தவர். ரஜினி அரசியலில் கால்பதிப்பர் என்று தொடங்கி, ரசிகர்கள் சந்திப்பை முன்னின்று நடத்தியவர். ரஜினியின் அரசியல் நிகழ்வுகளின் அதிகாரப்பூர்வ தகவல்களை சுதாகர் தரப்பில் இருந்தது தான் வெளிவரும். பல்வேறு நிர்வாகிகள் நீக்கம் உட்பட பல்வேறு முக்கிய அறிவிப்புக்கள் சுதாகரின் கையப்பம் பெற்றே வெளிவரும். அப்போது ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டார் சுதாகர்.
இந்நிலையில், உடல் நலக்குறைவால் சுதாகர் இன்று காலை காலமானார். இதுதொடர்பாக ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.