சபரிமலை ஐயப்பன் கோயில் அருகே வெடி வழிபாட்டுக்கான வெடி மருந்து நிரப்பும் மையத்தில் தீவிபத்து ஏற்பட்டதில் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை விழா நடந்து வருகிறது. பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்ட பிறகு வெகு விமரிசையாக நடைபெறுவதால், பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சபரிமலையில் வெடி வழிபாட்டுக்கான வெடிமருந்து நிரப்பும் மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மாளிகைபுரம் அருகே வெடி வழிபாட்டுக்கான வெடி மருந்து நிரப்பும் மையம் உள்ளது.

இந்த மையத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பாய்ச்சி தீயை அணைத்தனர். இருப்பினும், இந்த தீ விபத்தில் அங்கு பணியாற்றிய ராஜேஷ், அமல், ஜெயக்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை மீட்டு சன்னிதானத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்துள்ள 3 ஊழியர்களில் ஒருவருக்கு 60 சதவீதம் தீக்காயமும், 2 பேருக்கு 40 சதவீதம் தீக்காயமும் ஏற்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.