பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம் மோசிம்பூர் கிராமத்தை சேர்ந்த 30 வயது தலித் பெண்ணின் கணவர், அதே கிராமத்தின் உயிர்சாதியை சேர்ந்த பிரமோத் சிங் என்பவரிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். ஆனால், கடனுக்கான அசல் மற்றும் வட்டியை திருப்பி செலுத்திவிட்டதாக தலித் குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது. பிரமோத் சிங் தரப்பில் ரூ.1,500 வட்டி நிலுவையில் இருப்பதாகவும், அதனை உடனடியாக திருப்பி செலுத்துமாறும் மிரட்டி வந்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரமோத் சிங், அவரது மகன் அன்சு குமார் மற்றும் 4 ஆண்கள், கடந்த சனிக்கிழமை இரவு தலித் பெண்ணின் வீடு புகுந்து அவரை அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். அவரிடம் ரூ.1,500 வட்டித் தொகையை கேட்டு அவரை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்துள்ளனர். மேலும், அந்த பெண்ணின் வாயில் அன்சு குமார் சிறுநீர் கழித்து வன்கொடுமை செய்திருக்கிறார்.
தலித் பெண்ணின் குடும்பத்தினர் பல இடங்களிலும் அவரை காணவில்லை என்று தேடியுள்ளனர். பின்னர் ஆடையற்று மயங்கிய நிலையில், கிடந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அடுத்த நாள் அந்த கிராமத்தில் இருந்து நகரத்துக்கு பிழைப்புக்காக செல்லும் தொழிலாளர்கள் வாயிலாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 24 மணி நேரம் கழித்து, தலித் பெண் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்று வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், அவர்களின் பாதுகாப்புக்காக அந்த கிராமத்தில் போலீசார் முகாமிட்டுள்ளனர். தலித் பெண்ணை சித்திரவதை செய்த பிரமோத் சிங் மற்றும் குடும்பத்தினர் தலைமறைவாக உள்ளனர். இதற்கிடையே, தங்களுக்கு இந்த கிராமத்தில் பாதுகாப்பு இல்லை என்றும் இங்கு வசிக்கும் தலித் மக்களை வேறு ஊருக்கு குடியமர்த்துமாறு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.