சென்னையில் மளிகை பொருட்கள், காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இனி ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை இப்போது உள்ளதை விட 5 முதல் 10 சதவீதம் அதிகரிக்கும் என்று ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அண்மைக் காலமாக தக்காளி விலை தாறுமாறாக விற்பனை ஆகிறது. ஒரு கிலோ தக்காளி 120 முதல் 130 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) விலை 200 ரூபாயை தாண்டிவிட்டது. இது தவிர இஞ்சி மற்றும் பூண்டின் விலையும் நினைத்து பார்க்கவே முடியாத அளவிற்கு உயர்ந்துவிட்டது.
இப்படி மளிகை பொருட்கள் விலையும், காய்கறிகள் விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டதால் பொதுமக்கள் வழக்கத்தைவிட குறைந்தது 1,000 ரூபாய் வரை மாதம் பட்ஜெட்டில் அதிகமாக செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, ஓட்டல் மற்றும் உணவகங்கள் நடத்துபவர்களும் இந்த கடுமையான விலை உயர்வால அவதிப்பட்டு வருகின்றனர். விலைவாசி அதிகரித்துள்ளதால், தற்போது விற்பனை செய்யப்படும் விலையில் கொடுத்தால் தங்களுக்கு கட்டுப்படியாகாது என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து விலை அதிகரித்தபடியே இருப்பதால், ஓட்டல்களில் உணவு பண்டங்களின் விலையை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையை கணிசமாக உயர்த்த முடிவு செய்துள்ளனர். விரைவில் இது தொடர்பாக அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மின்சாரத்திற்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலையும், காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மின் கட்டணத்தை ஒரே மாதிரி வசூலிக்க வேண்டும் என்றும் காய்கறியை சேமித்து வைக்கும் குளிர்பதன சேமிப்பு கிடங்குகளை அதிகரித்து, தற்போது உள்ள தட்டுப்பாட்டை குறைக்க வேண்டும் என்றும் ஓட்டல் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்தியாவசியப் பொருட்களின் விலை இம்மாத இறுதிக்குள் கட்டுப்படுத்தாவிட்டால், ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை குறைந்தது 5 முதல் 10 சதவீதம் வரை உயரலாம் என்று சென்னை ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.