கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் லிவிங் டு கெதரில் இருந்த ஷ்ரத்தா வாக்கரை அவரது காதலன் அப்தாப் பூனாவாலா வெட்டிப்படுகொலை செய்தார். ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி அதனை வீட்டில் ப்ரிட்ஜில் வைத்து தினம் தினம் சில பாகங்களாக டெல்லியின் பல இடங்களில் நாய்களுக்கு வீசினார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இச்சம்பவத்திற்கு பின் இதேபோன்ற கொடூர கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவது வாடிக்கையாகி உள்ளது. அந்த வரிசையில் தற்போது டெல்லியில் பெண்ணின் உடல் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கீதா காலனி பகுதியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், பெண்ணின் உடல் பாகங்கள் பல துண்டுகளாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பெண்ணின் தலை பாலத்தின் அருகே கிடைத்தது.
அந்த பகுதியில் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில் அருகே உள்ள வனப்பகுதியில் பெண்ணின் எஞ்சிய உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொலை செய்யப்பட்ட பெண் யார்? பெண்ணை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி உடலை பாலத்தின் அருகே வீசியது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.