தமிழ்நாட்டில் குழந்தை திருமண முறை என்பதை அரசு தீவிரமாக ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தை திருமண விவகாரத்தில், சிறுமிகளை திருமணம் செய்யும் நபர், அவருக்கு உடந்தையாக இருக்கும் பெற்றோர் ஆகியோரின் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனாவுக்கு பின் தமிழ்நாட்டில் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக, சிறுமிகள் காதல் திருமணங்கள் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு பெற்றோர் ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்த நிலையில், அதனை சிறார்கள் படிப்பை தவிர பிற செயல்களுக்கு அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
இதில் 15 வயது முதல் 19 வயது வரையிலான சிறுமிகள், இளம்பெண்கள் காதல் வயப்பட்டு குழந்தை திருமணத்தில் சிக்கிக் கொள்கின்றனர். காதல் திருமணங்களில் 60 சதவீத சிறார் செல்போன் காதல் திருமணமே என ஆய்வுகள் கூறுகின்றன.