கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த லோகேஷ்வரன் (15) என்ற மாணவன், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடிந்து, தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சுக்கு சென்றுள்ளார். அங்கு சவாரி செல்லும் குதிரையின் அருகில் சென்றபோது, திடீரென அந்த குதிரை லோகேஷ்வரனை கடித்துள்ளது. இதில் பதறியடுத்துக் கொண்டு சிறுவன் அங்கிருந்து ஓடத் தொடங்கினான்.
ஆனால், அந்த குதிரை விடாமல் துரத்திச் சென்று சிறுவனை கடித்ததுடன், காலால் எட்டி உதைத்துள்ளது. மேலும், அங்கு பஜ்ஜி கடை வைத்திருந்த பத்மாவதி (60) என்பவரையும், தேன்மொழி என்பவரையும் அந்த குதிரை கடித்து விட்டு, தேவனாம்பட்டினம் ஊருக்குள் சென்றது. தற்போது குதிரை கடித்ததில் படுகாயமடைந்த மூவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, தேவனாம்பட்டினம் காவல்துறையினர், குதிரையின் உரிமையாளர் உதவியுடன் அந்த குதிரையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், அந்த குதிரையை பொதுமக்களும் துரத்திக் கொண்டே சென்றுள்ளனர்.
வேகமாக ஓடிய குதிரை, அங்கிருந்த பள்ளத்தில் திடீரென தடுமாறி விழுந்தது. பின்னர் அந்த குதிரையை மீட்டு கயிற்றால் கட்டிப் போட்டனர். ஆனால், ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த குதிரை, சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குதிரையின் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் சில்வர் கடற்கரையில் ஒட்டகம் மற்றும் குதிரைகள் சவாரி செய்வது வழக்கம். தற்போது ஒட்டகங்கள் இல்லாத நிலையில், குதிரை சவாரி மட்டுமே நடைபெற்று வருகிறது. இப்படி குதிரை சவாரி செய்வதற்கு மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், அனுமதி பெறாமல் குதிரையை வாங்கி வந்து வீட்டில் கட்டி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.