ஷாப்பிங் மற்றும் வெளியே செல்லும் மனைவிகளுக்காக, கணவரை பராமரிக்கும் Husband day care centre தொடங்கப்பட்டுள்ளது. இதை தனது சமூகவலைதள பக்கத்தில் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா பகிர்ந்துள்ளார்.
தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பயன்பாட்டில் எப்போதுமே ஆக்டிவாக இருக்க கூடிய நபர். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கிட்டத்தட்ட 10.4 மில்லியன் Followers-களை வைத்துள்ளதோடு, அவ்வப்போது நகைச்சுவையான மற்றும் புதிரான விஷயங்களை அதில் பகிர்ந்து கொள்வதை வழக்கமாகவும் வைத்திருப்பவர். அந்த வகையில், டென்மார்க்கில் உள்ள ஒரு கபே நிறுவனம் கணவர் பராமரிப்பு மையம் என்ற ஒன்ரை தொடங்கி உள்ளது. அதுகுறித்து அந்த நிறுவனம் தனது கடைக்கு வெளியே வைத்துள்ள விளம்பர பதாகையில் உங்கள் கணவரை எங்களிடம் விட்டுவிட்டு போங்கள்… என்ற விளம்பரத்தை வெளியிட்டு உள்ளது.
மேலும் அந்த விளம்பரத்தில் “உங்களுக்கு நேரம் தேவையா? ஓய்வெடுக்க நேரம் வேண்டுமா? ஷாப்பிங் செல்ல வேண்டுமா? உங்களது கணவரை எங்களிடம் விட்டுவிட்டு போங்கள்… உங்களுக்காக அவரை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம். நீங்கள் அவருடைய உணவு பராமரிப்பிற்கு மட்டுமே பணம் செலுத்தினால் போதும் என கூறி உள்ளது.
தற்போது அத்தகைய கணவர் பராமரிப்பு மையத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து தொழிலதிபர் ஆனந்த் மகிந்திராவும் கடந்த 28-ஆம் தேதி அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் சாதாரணமாக வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்ள முடியாமல், குழந்தைகளுக்கான பராமரிப்பு மையங்களில் விட்டு செல்வர்.
அதுபோல் ஷாப்பிங் மற்றும் வெளியே செல்லும் மனைவிகளுக்காக, கணவரை பராமரிக்கும் மையம் தொடங்கப்பட்டுள்ளது . இந்த புதுமையான முயற்சிக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான சேவைகளை வழங்க முடியும் என்பதற்கு தி ஹஸ்பண்ட் டே கேர் சென்டர் ஒரு சிறந்த உதாரணம் என்பதை மஹிகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா குறிப்பிட்டுள்ளார்.