தமிழக எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கலைவிழாவில் பங்கேற்ற நடிகை ரோகினி மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வி.கே.புரம் மூன்று விளக்கு திடல் பகுதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக கலை விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு திரைப்பட நடிகையும், சங்கத்தின் துணை தலைவரான ரோகிணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் தெருகூத்து பாடல், தெம்மாங்கு பாடல் , நாடகம், உள்ளிட்ட பல நிகழ்ச்சி நடைபெற்று பின்னர் வி.கே.புரம் பகுதியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு கேடயம் வழங்கப்பட்டது.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய நடிகை ரோகிணி, ”படித்துவிட்டு வீட்டிற்காக வேலை செய்யும் எத்தனை பேர் இந்தியாவில் உள்ளனர். அந்த குழந்தைகளுக்கு எந்த மாதிரியான வாய்ப்பு கொடுக்கிறோம் என்பதை யோசிக்காத, மக்களுடைய வாழ்க்கை முறையை பற்றி கவலைப்படாத ஒரு கல்வி கொள்கையை திணிக்கிறார்கள். ஏனென்றால் வேலையாட்கள் வேலையாட்களாவே இருக்க வேண்டும், வசதி வாய்ந்தவர்களின் குழந்தைகள் தான் அதிகாரத்தில் இருக்கும் இடத்திற்கு போக வேண்டும் என்பது தான் திட்டம்.
தமிழகத்தில் இது வேண்டாம் என ஆரம்பத்திலேயே பேசி இருக்கிறோம். சமஸ்கிருதம் மற்றும் இந்தி படிக்க சொல்கிறார்கள். ஆனால், சமஸ்கிருதத்தில் படித்தால் அர்ச்சனை செய்யக்கூடிய வேலை மட்டுமே கிடைக்கும். அதற்கு கூட நமது குழந்தைகளை சேர்ப்பதில்லை. இந்தி படித்தவர்கள் எல்லாம் தமிழகத்தில் ஏன் வந்து வேலை செய்கிறார்கள். அங்கே வேலைவாய்ப்பை ஏற்படுத்தாத இந்தியை நாம் இங்கு படிக்க வேண்டுமா? மிக முக்கியமாக தமிழகத்தின் மீது பொறாமையில் சுற்றி திரிகின்றனர். ஏனென்றால், தமிழக குழந்தைகளை எல்லாம் முற்போக்கு தனத்துடன் பெற்றோர் வளர்க்கின்றனர்.
தமிழர்களை நாங்கள் தலையில் வைத்துள்ளோம் எனக்கூறி இங்கிருந்து செங்கோலை கொண்டு செல்கின்றனர். ஆனால், அதற்கெல்லாம் நாம் அசருவது கிடையாது. தேர்தலில் உறுதி செய்துவிட்டோம். இனி வர போகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் யார் என்பதை காண்பிக்க போறோம். தென் இந்தியாவில் நம்மால் எதையும் செய்யமுடியவில்லை என மத்தியில் உள்ளவர்கள் நினைக்கிறார்களே, அதை நம்மால் முடிந்த வரை செய்ய முடியும்” என்று பேசினார்.