Aishwarya Rai: பிரான்சில் நடைபெற்றுவரும் 78வது கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், பாரம்பரிய புடவை அணிந்து கொண்டு சிவப்பு கம்பள வரவேற்பில் நடந்து சென்றார்.
78வது கேன்ஸ் திரைப்பட விழா மே 13 ஆம் தேதி தொடங்கி மே 24 ஆம் தேதி முடிவடையும். 75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்ட நிலையில், பாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரை பல பிரபலங்களும் வருடா வருடம் படையெடுத்து சென்று வருகின்றனர். அந்தவகையில், ஆண்டுதோறும் தவறாமல் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் நடிகை ஐஸ்வர்யா ராயின் பிரத்யேக உடையைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள். இந்நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரபலமாக இருக்கும் சிவப்பு கம்பளம் நிகழ்வில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனக்கான அழகு உடையுடன் நடை போட்டார்.
வெள்ளை நிற பனாரஸ் புடவையில் சிறப்பு வேலைப்பாடுகளுடன் உருவான அந்தப் புடவை அனைவரையும் கவர்ந்தது. இதேபோல், அவரது நெற்றியில் குங்குமம் மேலும் அவரை அழகாக காண்பித்தது. அவரது உடையில் 500 காரட்டிற்கும் அதிகமான மொசாம்பிக் மாணிக்கங்கள் மற்றும் 18k தங்க நெக்லஸில் பட்டை தீட்டப்படாத வைரங்கள் பதிக்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா ராயின் இந்த அழகான உடையை, மனிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்துள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த புடவை, குங்குமம், நகைகள் அனைத்தும் மிகவும் பாரம்பரியமாக இருந்தது.
அபிஷேக் பச்சனுடனான விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில் அதற்கு பதிலளிக்கும் விதமாக ஐஸ்வர்யா ராஜ், சிந்தூர் அணிந்திருந்தது பலரால் பார்க்கப்பட்டது, அதே நேரத்தில் 2002 இல் தேவதாஸுக்காக அவர் முதன்முதலில் கேன்ஸில் தோன்றியதை நினைவூட்டுகிறது.