தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகி உமா ரமணன் (69) உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
தமிழ்த் திரை உலகின் பின்னணிப் பாடகியான உமா ரமணன், 69 வயதில் காலமானார். உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சென்னை அடையாறு, காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்திலேயே ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் உயிரிழந்தார்.
நிழல்கள் திரைப்படத்தின் “பூங்கதவே தாழ் திறவாய்” என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி கவர்ந்தவர். எம்எஸ்வி, இளையராஜா, உள்ளிட்ட இசை அமைப்பாளர்கள் இசையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள அவர், குறிப்பாக இளையராஜா இசையில் ஏராளமான வெற்றி பாடல்களை பாடியுள்ளார்.
இவர் நிழல்கள், தில்லுமுல்லு, அரங்கேற்ற வேளை, வைதேகி காத்திருந்தாள், முதல் வசந்தம் என பல்வேறு திரைப்படங்களில் பாடிய அவர் இறுதியாக திருப்பாச்சி படத்தில் “கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சி” பாடலை பாடினார். அதன் பிறகு கணவர் ராமணனுடன் இணைந்து மேடை கச்சேரிகளில் பாடி வந்தார்.
நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்த பாடகி உமா ரமணனின் மறைவு இசை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உமா ரமணனின் இறுதிச் சடங்குகள் இன்று (மே 2) மாலை சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.