புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக ரமேஷ் (52) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 7ஆம் தேதி 3 மாணவிகள், இரண்டு மாணவர்களை அவர்களின் பெற்றோருக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் தெரியாமல் கொடைக்கானலுக்கு காரில் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார். அதில், மாணவி ஒருவருக்கு ரமேஷ் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து, அவர்களை மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்து வந்த ரமேஷ் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் பள்ளி நிர்வாகத்துக்கு தெரியவந்தால், செய்முறை தேர்வு மதிப்பெண்களை குறைத்துவிடுவதாகவும் அந்த மாணவியை மிரட்டியுள்ளார். ஆனால், அந்த மாணவி வீட்டிற்கு வந்ததுமே, தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், புகார் அளித்தனர். இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்துமாறு கல்வித்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். விசாரணையில் குற்றம் உறுதியானது. இந்த சம்பவம் தொடர்பாக கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.