விழுப்புரம் மாவட்டம் அமாவாசைபாளையம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்கப்பள்ளியை திறந்து வைத்த அமைச்சர் பொன்முடி, பிஞ்சு மழலைகளுடன் சில நிமிடங்கள் கலந்துரையாடினார். நீங்க என்னவாக வர ஆசைப்படுறீங்க, டாக்டரா? இஞ்சினியரா? என கேள்வி எழுப்பிய அவர், கணிதம் நன்றாக படித்தால் பொறியாளராகலாம் என அட்வைசும் கொடுத்தார். அதேபோல் வகுப்பறைக்குள் நுழைந்ததும் தன்னை பார்த்து குட் மார்னிங் சார் என குழந்தைகள் சொன்னதும், தமிழில் வணக்கம் என்று தான் சொல்ல வேண்டும் என்றார்.
இதற்கிடையே, மாணவர்களுக்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்த அமைச்சர் பொன்முடி, அங்கிருந்து புறப்பட எழுந்த போது அவரது செருப்பு நாற்காலிக்குள் சிக்கிக்கொண்டது. அதனை அவரே எடுப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருந்த நிலையில், ஆர்வக்கோளாறில் அங்கிருந்த திமுக தொண்டர் ஒருவர் அமைச்சரின் செருப்பை கையில் எடுத்துக் கொடுக்க குணிந்தார். கொஞ்சமாவது அறிவிருக்கா என வசைபாடிய அமைச்சர் பொன்முடி, அந்த நபரை தடுத்து நிறுத்தி தள்ளிப் போகச் சொல்லிவிட்டு தனது செருப்பை தானே எடுத்து காலில் அணிந்துகொண்டார். ஏற்கனவே அமைச்சர் பொன்முடியை சுற்றி ஏராளமான சர்ச்சையில் இருக்கின்றன. இந்நிலையில், இது வேறயா என்கிற வகையில் அமைச்சருடன் சென்றவர்களும் இந்த நிகழ்வால் பதறிப்போனார்கள்.