நாடு முழுவதும் தற்போது டிஜிட்டலுக்கு மாறி வருகிறது. அந்தவகையில், விரைவில் ஆதார் கார்டு போல மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில், மாநிலம் முழுவதும் 38,000 அரசுப் பள்ளிகளும், 8,000 அரசு உதவி பெறும் பள்ளிகளும் செயல்படுகின்றன. அரசு பள்ளிகளில் 45 லட்சம் மாணவ, மாணவியரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில், 22 லட்சம் பேரும் படிக்கின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சிலவற்றில், ஆசிரியர்களின் பணியிடங்களை தக்க வைக்க மாணவ-மாணவியரின் சேர்க்கையை போலியாக அதிகரித்து காட்டுவதாக கடந்த காலங்களில் புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விசாரணை நடத்தி போலி மாணவர் எண்ணிக்கை பிரச்சனையை தடுக்க, மாணவர்களின் ஆதார் எண், ரத்தப் பிரிவு, பெற்றோரின் செல்போன் எண் போன்றவற்றை எமிஸ் ஆன்லைன் தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த பிரச்சனைக்கு முழுமையாக தீர்வு காண, மாணவர்களின் சேர்க்கையை ஆன்லைன் முறையில் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், அரசு சார்பில் தனியார் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் முறையில் நடத்தப்படுகிறது.
இதேபோல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஆன்லைன் வழி சேர்க்கை நடத்தினால், போலி விண்ணப்பங்கள் பதிவு செய்ய முடியாது என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்துள்ளனர். மேலும், பெற்றோருக்கு சிரமமின்றி, பள்ளி ஆசிரியர்கள் அல்லது எமிஸ் தளத்துக்கான ஆன்லைன் பணி ஊழியர்கள் வழியே, ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.