நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதால் பல கிராமங்கள் தனித்தீவு போல காட்சி அளிக்கின்றன. வீடுகளை மூழ்கடிக்கும் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடியை சேர்ந்த பெண் ஒருவர், என் கணவரை எப்படியாவது காப்பாற்றி கொடுங்கள்.. எங்களுக்கு என்று யாரும் கிடையாது.. என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவில் மனைவியுடன் வீடியோ காலில் பேசும் கணவர் கூறியிருப்பதாவது, ”ஏய் அகஸ்டின்.. இப்போது தண்ணீர் கிட்டத்தட்ட என் மார்பு அளவுக்கு வந்துவிட்டது. புடித்துக்கொண்டு அப்படியே நின்றுகொண்டிருக்கிறேன். இப்போது இந்த வீடியோவில் ரோடு எங்கே இருக்கிறது என்று நான் காட்டுகிறேன். இந்த வீடியோவை காட்டு.. நான் இருக்கிற இடத்தில் வாழை மரங்கள் தான் இருக்கிறது. அதுவும் சற்று தொலைவில் இருக்கிறது” என்கிறார்.
இந்த வீடியோவை பார்த்து விட்டு அகஸ்டின் என்ற அந்த பெண் அழுதுகொண்டே கூறுகையில், “என் கணவர் பெயர் பிரான்சிஸ். அவரோட நண்பரோட குடும்பத்தை காப்பாற்றுவதற்காக நேற்று சென்றார். ஆனால், இப்போது வரை வரவில்லை. தண்ணீரிலே மாட்டிக்கிட்டாங்க.. இப்போது வீடியோ கால் செய்தார். இதில் அவர் மார்பு அளவுக்கு தண்ணீர் வந்துவிட்டது. காரின் மீது ஏறி நிற்பதாக கூறினார். 4 மணி வரை தொடர்பில் இருந்தாங்க.. அதன்பிறகு கணவரை தொடர்புகொள்ள முடியவில்லை. கலெக்டர் ஆபிசுக்கு போயாச்சு.. கமிஷனர் ஆபிசுக்கு போயாச்சு.. ஆனாலும் இப்போது வரை எந்த தகவலும் இல்லை. என் கணவரை எப்படியாவது காப்பாற்றி கொடுங்கள்.. எங்களுக்கு என்று யாரும் கிடையாது” என்று அந்த பெண் கூறியுள்ளார்.