டெல்லியில் மகனே தாயை ஊசியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மாநிலம் ரோகிணி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரிங்கு. இவருக்கு வயது 38. சற்று மனநலம் பாதிக்கப்பட்டவரான இவர் தாய் சத்வந்த் கவுர் (64) உடன் வசித்து வந்தார். இந்நிலையில், திடீரென ஆத்திரமடைந்த ரிங்கு, தனது தாயை பலமுறை ஊசியால் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த தாய், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையை தொடர்பு கொண்டு ரிங்கு தனது தாயை ஊசியால் குத்தி காயப்படுத்தியதாக அவரே தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அவரது தாயை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு ரிங்கு-விடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகனே தாயை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.