கேரளாவில் இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அந்தமான் பகுதியில் மே 20ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது .கேரளாவில் வழக்கம் போல ஜூன் 1ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால், இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தொடங்க காலதாமதம் ஆகியுள்ளது. இருப்பினும் 4 நாட்கள் முன்பின் ஆனாலும் வழக்கமான காலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாகவே கணிக்கப்படுகிறது. ஜூன் 5ஆம் தேதி தேதிக்கு மேல் பருவமழை தொடங்கினால் அது தாமதமான பருவமழை என்று தெரிவிக்கப்படும். இந்தாண்டு தென்மேற்கு பருவமழை இதுவரை கேரளாவில் தொடங்கவில்லை. தென்மேற்கு பருவமழை தொடங்கினால் தமிழகத்தில் வெயில் குறைய தொடங்கும்.
அரபிக் கடலில் ஏற்பட்ட காற்று சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று தற்போது புயலாக மாறியுள்ளது. இந்த காற்று வீசும் திசை மாற்றத்தினால் தென்மேற்கு பருவமழை வீசுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.