பஞ்சாப் சிறைத்துறை அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள தகவலின் படி;-
பஞ்சாப் சிறைகளில் உள்ள கைதிகள் தங்கள் மனைவி அல்லது கணவருடன் தனி அறையில் 2 மணி நேரம் தனியாக இருக்க அனுமதி அளிக்க சிறைத் துறை முடிவு செய்துள்ளது. வரும் 27-ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வர உள்ளது. நபா மாநகரில் இருக்கும் கோயிந்த்வால் மத்திய சிறைச்சாலை மற்றும் பத்திண்டா நகரிலுள்ள பெண்கள் சிறைச்சாலை ஆகிய இரு சிறைச்சாலைகளில் இதை அறிமுகப்படுத்த உள்ளனர்.
நன்னடத்தை கைதிகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை அளிக்கப்படும். கொடூர குற்றங்களைப் புரிந்தவர்கள், அபாயகரான கைதிகள், பாலியல் குற்றம் செய்தவர்கள் ஆகியோருக்கு இந்த சலுகை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைகளில் நீண்ட காலமாக இருக்கும் நன்னடத்தை கைதிகளுக்கே முன்னுரிமை உண்டு. சிறை வளாகத்தில், குளியலறையுடன் கூடிய தனி அறையில் கைதி தனது மனைவியுடன் 2 மணி நேரம் செலவிட அனுமதி உண்டு. இந்த அனுமதியால் சிறைக் கைதிகளிடம் நன்னடத்தை அதிகரிக்கும்.
அவர்களின் திருமண பந்தமும் வலுப்படும். இந்த அனுமதி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டும் வழங்கப்படும். மேலும் ஹெச்.ஐ.வி பாதிப்பு மற்றும் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான மருத்துவச் சான்றிதழுடன் வரும் மனைவி அல்லது கணவனுக்கு மட்டுமே சிறையில் இருக்கும் தங்கள் இணையருடன் இருப்பதற்கு அனுமதி கிடைக்கும் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் சிறைக் கைதிகளுக்கு இதுபோன்ற சலுகையை, பஞ்சாப் மாநிலம் தான் முதல் முறையாக அளிக்கிறது. என அந்த அதிகாரி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.