தன்னிடம் பேச மறுத்த 20 வயது இளம்பெண்ணை, இளைஞர் ஒருவர் 51 முறை ஸ்க்ரூடிரைவரால் குத்தி கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் நடுநடுங்க வைத்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் கோப்ரா மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜாஷ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த நபர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து ஒன்றில் நடத்துனராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது தினமும் அந்த பேருந்தில் பயணித்த அந்த இளம்பெண்ணிடம் நைசாக பழக ஆரம்பித்தார். பின்னர் இருவரும் செல்போன் எண்களை பறிமாறிக் கொண்டுள்ளனர். பின்னர், வேலை நிமித்தமாக அகமதாபாத் சென்ற அந்த நபர், தொடர்ந்து அந்த பெண்ணிடம் செல்போனில் பேசிவந்துள்ளார்.

ஒரு கட்டத்தில், அந்த பெண், அந்த இளைஞரிடம் பேசிவதை நிறுத்திக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், அந்த பெண்ணையும் அவரது குடும்பத்தையும் மிரட்டியுள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று South Eastern Coalfields Limited பகுதியில் இருக்கும் பம்ப் ஹவுஸ் காலனி வீட்டில் அந்த பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த அந்த இளைஞர், பெண்ணின் வீட்டிற்கு சென்று அந்த பெண் கத்தும் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க அவரது வாயை தலையணையால் அடைத்து, ஸ்க்ரூடிரைவரால் 51 முறை குத்திக் கொலை செய்துள்ளார். பின்னர், அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த அந்த பெண்ணின் சகோதரர், ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது சகோதரியை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், அந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க 4 தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.