இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு இன்று பதவியேற்றுக் கொண்டார்.
பின்னர் பேசிய அவர், “நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி. நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்திற்காக பணியாற்றுவேன். குடியரசுத் தலைவராக பதவி ஏற்றது பெருமை அளிக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றது பெருமைக்குரியது. அனைத்து இந்தியர்களின் எதிர்பார்ப்புகள், உரிமைகளின் சின்னமான நாடாளுமன்றத்தில் நின்று உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புதிய பொறுப்பை நிறைவேற்ற உங்கள் நம்பிக்கையும், ஆதரவும் எனக்கு பெரும் பலமாக இருக்கும். சாதாரண கவுன்சிலராக தொடங்கி இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்தது ஜனநாயகத்தின் மகத்துவம்.
![’சாதாரண கவுன்சிலராக தொடங்கி குடியரசுத் தலைவராக உயர்ந்தது ஜனநாயகத்தின் மகத்துவம்’..! - திரெளபதி முர்மு உரை](https://1newsnation.com/wp-content/uploads/2022/07/photos-15_165872621600-1024x791.jpg)
ஏழை வீட்டில் மகளாகப் பிறந்த நான், நாட்டின் குடியரசுத் தலைவர் ஆக முடியும் என்பது தான் ஜனநாயகத்தின் சக்தி. பெண்கள் மற்றும் இளைஞர்கள் நலனில் தனிக் கவனம் செலுத்துவேன். என்னுடைய உயர்வு கோடிக்கணக்கான பெண்களின் கனவுகளுக்கான திறவுகோலாக இருக்கும். இந்த நேரத்தில் என்னை தேர்ந்தெடுத்த எம்.பி-க்கள் எம்.எல்.ஏ-க்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியின மக்கள் முக்கிய பங்காற்றி இருக்கிறார்கள். அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து பாரதத்தை கட்டி எழுப்ப முனைப்புடன் செயல்படுவோம். நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்திற்காக பணியாற்றுவேன். அடுத்த 25 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டம் தயாராகும் நேரத்தில் இவ்வாறு சேவையாற்ற வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம்” என்றார்.