சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (32). இவர் பள்ளிக்கரணையில் வசித்து வரும் நிலையில், இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (30) என்பவர் நண்பராக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு சதீஷ் தனது காதலியை அழைத்துச் சென்று மூர்த்தி வீட்டில் தங்கி வந்துள்ளார். அப்போது மூர்த்தி வீட்டில் இருக்கும் செல்போன், ரூ.25 ஆயிரம் பணத்தை சதீஷ் திருடிச் சென்றுள்ளார்.
இது குறித்து மூர்த்தி, சதீஷை தொடர்பு கொண்டு பணம் மற்றும் செல்போனை திரும்பி தரும்படி கேட்டுள்ளார். இதற்கு சதீஷ் எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார். இப்படியே சில நாட்கள் இழுத்தடித்து உள்ளார் சதீஷ். ஒரு கட்டத்தில் மூர்த்தி ஆத்திரமடைந்து சதீஷிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போதும், சதீஷ் செல்போன் மட்டுமே மூர்த்தியிடம் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து, நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மேடவாக்கம் அருகே இருவரும் மது அருந்தியுள்ளனர். பின்னர், போதையில் இருந்த சதீஷிடம் தனது வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற ரூ.25,000 பணத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்டுள்ளார் மூர்த்தி. இதனால் இருவர்களுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த மூர்த்தி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஷை சரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர், மூர்த்தியையும் சதீஷ் வெட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். உடனே இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அங்கு இருவரையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, சதீஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், படுகாயமடைந்த மூர்த்தி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர், சதீஷ் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூர்த்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.