பூந்தமல்லி அருகே சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகைகளை திருடி, இளம்பெண்ணுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பூந்தமல்லி முத்துநகரை சேர்ந்தவர் சேகர் (40) இவரது தம்பி ராஜேஷ் (37) இவர்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், தனது தாயாருடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே ஸ்வீட் கடை ஒன்று உள்ளது. மேலும், பைனான்ஸ் தொழிலும் செய்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேகரின் மனைவி பிரிந்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு திரும்பி வந்த அவர், பீரோவில் வைத்துச் சென்ற 300 சவரன் நகையை பார்த்த போது அது மாயமாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து, ராஜேஷும் தேடி பார்த்தபோது, தனது மனைவி மற்றும் தாயின் சுமார் 200 சவரன் நகையும், 5 தங்க கட்டிகளும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ராஜேஷ் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அண்ணன் சேகர் 550 சவரன் நகையை திருடி அவரது தோழியான இளம்பெண்ணிடம் கொடுத்திருப்பது தெரியவந்தது. சேகரிடம் விசாரணை மேற்கொண்டதில், இவருக்கும் வேளச்சேரி கேசரிபுரம் மெயின்ரோட்டை சேர்ந்த இளம்பெண் ஸ்வாதி (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் போரூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அடிக்கடி சந்தித்துக் கொள்வது வழக்கம். மேலும், வீட்டிலிருந்த 550 சவரன் நகையையும் கொஞ்சம் கொஞ்சமாக தோழி ஸ்வாதியிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஸ்வாதிக்கு காரும் வாங்கிக் கொடுத்துள்ளார். இந்நிலையில் போலீசாரின் விசாரணையில், சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகையை திருடிய சேகர் மற்றும் அவரது தோழி ஸ்வாதியை பூந்தமல்லி போலீசார் கைது செய்து ஸ்வாதியிடமிருந்து காரை பறிமுதல் செய்தனர். மேலும், மாயமான நகைகள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.