கோயிலுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் விரைவாக தரிசனம் செய்யும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது..
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ராம் குமார் ஆதித்தன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில் “ இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மொத்தமாக 46,014 கோயில்கள் உள்ளன.. பெரும்பாலான கோயில்களில் பொது தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் என 2 வகைகளில் தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது.. பல முக்கிய கோயில்களில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் தங்கள் குடும்பத்தினர் வரும் போது பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது..
மேலும் பல கோயில்களில் குடிநீர் வசதி, காற்றோட்ட வசதி, அவசர மருத்துவ உதவி போன்றவை முறையாக செய்து தரக்கோரி அதிகாரிகளிடம் கோரி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.. ஆகவே தென் தமிழகத்தின் முக்கிய கோயில்களில், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்ய குறிப்பிட்ட தரிசன நேரத்தை உருவாக்க வேண்டும்.. பொது தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனத்திற்கு நேரம் குறிப்பிட்டு டோக்கன் வழங்க உத்தரவிட வேண்டும்..” என்று கூறியிருந்தார்..
இந்த மனு இன்று சுரேஷ் குமார், ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது ஒவ்வொரு கோயிலிலும், ஒவ்வொரு பூஜை முறை பின்பற்றப்படுவதால் இதனை செயல்படுத்த முடியாது என்று தமிழக அரசு தரப்பு தெரிவித்தது.. அப்போது நீதிபதிகள் “ கோயில்களுக்கு வருபவர்களில் 50% பேர் மூத்த குடிமக்களும், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களும் ஆவர்..
கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் தரிசனத்திற்கான நேரத்தை குறிப்பிட்டு அனுமதிக்க வேண்டும் என்பது இயலாத ஒன்று.. ஆனால் கோயிலுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் விரைவாக தரிசனம் செய்ய வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை நியாயமானது.. கோயிலுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் விரைவாக தரிசனம் செய்யும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் 12 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்..