சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து மாநில கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி என முக்கிய கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் சென்னை – கும்மிடிப்பூண்டி புறநகர் ரயிலில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், அடிக்கடி இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து சென்னை சென்ட்ரலில் இருந்து சூளூர்பேட்டை நோக்கிச் சென்ற புறநகர் ரயிலில் ஒருதரப்பு மாணவர்கள் பயணித்துள்ளனர். அப்போது பொன்னேரி ரயில் நிலையத்தில் மற்றொரு தரப்பினர், ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர், பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து கவரைப்பேட்டை ரயில் நிலையத்திற்குச் செல்லும் வழியில் பெரியகாவனம் அருகே புறநகர் ரயிலை நிறுத்தி இருதரப்பு கல்லூரி மாணவர்கள் மீண்டும் கத்தியுடனும், கற்களை வீசியும் தாக்கிக் கொண்டனர்.
![ஓடும் ரயிலை நிறுத்தி கற்கள் வீசி தாக்குதல்..!! கல்லூரி மாணவர்களின் செயலால் அச்சத்தில் உறைந்த பயணிகள்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2023/02/123.jpeg)
இந்த மோதலில் காயமடைந்த கல்லூரி மாணவர் ஒருவர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.