கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொன்று புதைத்து அதற்கு மேல் செப்டிக் டேங்க் கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி காஜியாபாத் நகரில் வசித்து வருபவர் சோட்டேலால். இவர் கடந்த 10ஆம் தேதியன்று காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “தனது சகோதரர் சதீஷ் பாலை ஒரு வாரமாக காணவில்லை” என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், சதீஷ் பால் காணாமல் போய் சில நாட்கள் ஆகியும் அவர் மனைவி நீத்து ஏன் புகார் அளிக்கவில்லை? என்று சந்தேகப்பட்டு போலீசார் விசாரணை செய்தனர். ஆனால், அவர்களால் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. இந்நிலையில், சதீஷையும், அவரது மனைவி நீத்துவையும் அடிக்கடி சந்தித்துச் சென்ற ஹர்பால் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சதீஷ் பாலின் மனைவி நீத்து, கவுரவ் என்பவரின் உதவியுடன் கணவரைக் கொன்று புதைத்ததை ஹர்பால் ஒப்புக்கொண்டார்.

சதீஷ் குடும்பத்துடன் நெருக்கமான ஹர்பாலுக்கும், சதீஷ் மனைவி நீத்துவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால், கணவரை கொன்றுவிட்டு, திருமணம் செய்துகொள்வதற்கு இருவரும் முடிவு செய்துள்ளனர். அதன்படி, சதீஷை கொல்வதற்கு ஹர்பாலின் நண்பர் கவுரவ் உதவியுள்ளார். இதையடுத்து நீத்து கடந்த 2-ஆம் தேதி கணவர் சதீஷுக்கு பானத்தில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்துள்ளார். இதனால், அவர் ஆழ்ந்து உறங்கியுள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நீத்துவும், கள்ளக்காதலனும் சதீஷை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இந்நிலையில், கள்ளக்காதலன் ஹர்பாலும், அவருடைய நண்பர் கவுரவும் கொத்தனார்கள். இவர்கள் இருவரும் நீத்துவின் வீட்டின் அருகே புதிதாக ஒரு வீட்டை கட்டிக்கொண்டிருந்தனர்.

அந்த இடத்திலேயே சதீஷின் உடலைப் புதைப்பதற்கு அவர்கள் முடிவு செய்து, சதீஷின் உடலை இழுத்துச் சென்று அங்கு புதைத்து, அதன் மீது கழிவுநீர் தொட்டியை கட்டியுள்ளனர். இந்த கொலை சம்பவம் கள்ளக்காதலனின் வாக்குமூலத்தில் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், புதிதாக கட்டப்படும் வீட்டின் உரிமையாளரின் அனுமதியுடன் போலீசார் செப்டிங் டேங்கை உடைத்து, புதைக்கப்பட்டிருந்த சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த வழக்கில் கள்ளக்காதலனுடன் சதீஷின் மனைவி நீத்துவையும் போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள நண்பர் கவுரவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.