அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பட்டாசுகளுக்கான கட்டுப்பாடுகள் குறித்து வரும் 28ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் அடுத்த மாதம் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் நிலையில், பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள், தடை செய்யப்பட்ட சீன பட்டாசு விற்பனையை கண்காணிப்பது, பசுமைப் பட்டாசுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்து வரும் 28ஆம் தேதி தமிழக அரசு ஆலோசனை நடத்துகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர். மேலும், சிவகாசி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 6 பட்டாசு விற்பனை சங்கத்தின் பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். ஆலோசனைக்குப் பிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்படும்.