முன் அறிவிப்பு இன்றி விடுமுறை எடுக்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தினமும் பேருந்துகளை இயக்குவதற்கு முன்பு ஓட்டுநர், நடத்துனர்களிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு போக்குவரத்துத் துறை ஒரு செய்திக்குறிப்பில், ”தினமும் பேருந்து ஓட்ட வேண்டிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் முதல் நாளே Control Chart-ல் கையெழுத்திட வேண்டும். தினசரி இயக்க வேண்டிய பேருந்துகளுக்கு, ஒரு நாள் முன்னதாக Control Chart-ல் கையொப்பம் பெற வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒருவேளை ஓட்டுநர் அல்லது நடத்துனர் மாலை 5 மணிக்குள் லீவு கேட்டால், உடனே வேறொருவரை வைத்து பேருந்தை இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாராவது அடிக்கடி விடுமுறை எடுத்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிக்கு வராமல் முன் அறிவிப்பின்றி விடுமுறை எடுக்கும் ஓட்டுநர், நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், முக்கியமான விசேஷ நாட்களில் (முகூர்த்த நாட்கள்) அனைத்து பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.