திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் சிஐடியூ-வின் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின் மாநிலத் தலைவர் அ.சௌந்தரராசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தற்போது ஏராளமான பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, தொழிலாளர்கள் விவகாரத்தில் சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சரின் அறிவிப்பு ஒன்றாகவும், ஆனால், அரசு நடந்துகொள்வது வேறுவிதமாகவும் இருக்கிறது.
போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வைப்பு நிதி, காப்பீட்டு நிதி உள்ளிட்டவற்றிலிருந்து ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் அரசு எடுத்து செலவழித்துவிட்டது. ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 90 மாதங்களுக்கு மேலாக வழங்க வேண்டிய பஞ்சப்படி இதுவரை வழங்கப்படவில்லை. இப்படியாக போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பணப் பலன்களை வழங்காமல் இருந்து வருகிறது.
போக்குவரத்துக் கழகத்தில் 15 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக சென்னையில் மட்டும் 900 அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இதனால், மக்களுக்கான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 1,424 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இந்தப் பணியிடங்களுக்கு 600 பேரை மட்டும் நிரந்தரப் பணியாளர்களாக எடுத்துவிட்டு, மீதமுள்ள 800 காலியிடங்களுக்கு தனியார் அவுட் சோர்ஸிங் மூலம் தொழிலாளர்களை நியமிக்க அரசு திட்டமிட்டு அதற்கான டெண்டரும் வெளியிட்டிருக்கிறது.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மே 3ஆம் தேதிக்கு பின்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கான முன்னறிவிப்பு நோட்டீஸ் போக்குவரத்துக் கழகத்திடம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 18) வழங்கப்படும். 15 நாட்களுக்குள் அரசு பேச்சுவார்த்தை நடத்தி எங்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணாவிட்டால், மே 3ஆம் தேதிக்குப் பிறகு காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.