நீலகிரி மாவட்டத்தில் கல்லூரி மாணவி மது அருந்தியதைத் தொடர்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியின் பாம்பே கேசில் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஆகாஷ் (20). இவரும் பிங்கர் போஸ்ட் பகுதியைச் சேர்ந்த ரிதி ஏஞ்சல் (19) என்ற கல்லூரி மாணவியும் காதலித்து வந்துள்ளனர். ரிதி ஏஞ்சல் கோவையில் ஒரு நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், ஆகாஷ் ஊட்டிக்கு வருமாறு கடந்த சனிக்கிழமை அழைத்துள்ளார். அதன்படி, காதலரை சந்திக்க மாணவியும் வந்துள்ளார். ஆகாஷ் அவரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
வழியில் அவர்கள் மது வாங்கிக்கொண்டு சென்றுள்ளனர். மேலும், மேஜிக் காளான் எனப்படும் போதை காளானை பறித்து அதனை மதுவுடன் சேர்த்து சாப்பிட்டுள்ளனர். பின்னர் இருவரும் தூங்கிவிட்டனர். வெகுநேரம் கழித்து ஆகாஷ் கண்விழித்து பார்த்துள்ளார். அவர் ரிதி ஏஞ்சலை எழுப்ப முயற்சிக்க அவரோ சுயநினைவில்லாமல் இருந்துள்ளார். இதனால் பதறிப்போன ஆகாஷ், ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். உடனே அப்பகுதிக்கு வந்த மருத்துவ பணியாளர்கள் ரிதி ஏஞ்சலை பரிசோதித்தபோது அவர் உயிரிழந்துவிட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாணவியின் உடல் கைப்பற்றப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், ஆகாஷை கைது செய்த போலீசார், அவர் மீது கொலை குற்றம் ஆகாத மரணம் ஏற்படுத்துதல் பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போதை காளான் சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.