கிருஷ்ணகிரியில் அரசுப் பள்ளி மாணவர்கள் கட்சித் துண்டு போட்டு சாதிய பாடலுக்கு நடனமாடிய விவகாரம் தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சோப்பனூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியின் ஆண்டு விழாவில் மாணவர்கள் கழுத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் துண்டை தோளில் போட்டுக்கொண்டு, மறுமலர்ச்சி படத்தில் வரும் ’புகழ் இருக்குது, பெயர் இருக்குது ராசி படையாட்சிதான்’ என்ற பாடலுக்கு நடனமாடினர்.
அதுமட்டுமின்றி, நடனமாடிய மாணவர்களின் டி-ஷர்ட்டில் காடுவெட்டி குரு மற்றும் சந்தனக் கடத்தல் வீரப்பன் ஆகியோரின் படங்களும் இடம்பெற்றிருந்ததை கண்டு அங்கு வந்திருந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, ஆசிரியர்களுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், பாமக துண்டு போட்டு மாணவர்கள் நடனமாடிய விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ”மாணவர்கள் கட்சித் துண்டு போட்டு சாதிய பாடலுக்கு நடனமாடிய விவகாரத்தில் அப்பள்ளியின் தலைமையாசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பள்ளியில் என்ன நடந்தாலும், அதற்கு தலைமை ஆசிரியரே பொறுப்பு” என்று தெரிவித்துள்ளார்.