தமிழ்நாட்டில் பள்ளி விடுமுறை நீட்டிக்கப்பட்டதால் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்.29-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டு விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரித்ததால், பள்ளிகள் திறப்பை ஜூன் 7-ம் தேதிக்குத் தள்ளிவைப்பதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.
வெயிலின் தாக்கம் குறையாததால், பள்ளிகள் திறப்பை மேலும் தள்ளிவைக்குமாறு பெற்றோர், கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு. இதையேற்ற, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பள்ளிகள் திறப்பு 2-வது முறையாக மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது. எனவே வரும் 2023-24-ம் கல்வி ஆண்டில்6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 12-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஜூன் 14-ம் தேதியும் பள்ளி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்தவகையில், இன்று 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அனைத்துப் பள்ளி வளாகங்களிலும் தூய்மை பணிகள் உட்பட முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்றன. இதற்கிடையே, நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ‘கோடையின் தாக்கம் அதிகம் இருந்ததால், மாணவர்கள் நலன் கருதி கோடைவிடுமுறை நீட்டிக்கப்பட்டு பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்படுவதால், ஒரு பாடத்துக்கு 4 மணி நேரம் வரை பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது ஆகவே, பாடங்களை நடத்த ஏதுவாக, சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.