மாடுகளின் பாரத்தை குறைக்கும் வகையில் மாட்டு வண்டியில் 3-வது சக்கரத்தை தயாரித்த மாணவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர் .
மகாராஷ்டிர மாநிலம் ராஜாராம் நகரில் ராஜாராம்பாபு இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் கரும்பு செழிப்பாக வளர்வதால் விவசாயிகள் மாட்டு வண்டியில் கரும்பை ஏற்றி சர்க்கரை ஆலைக்கு கொண்டு வருவது வழக்கம். இதனைக் கண்ட அந்த கல்லூரி மாணவர்கள் விவசாயிகள் மாட்டு வண்டியில் கரும்பை கொண்டு வரும் போது மாடுகளுக்கு ஏற்படும் கஷ்டத்தை குறைக்க முடியுமா என யோசித்துள்ளனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள விவசாயிகளை சந்தித்து பேசிய அவர்கள், பலமுறை யோசித்து வண்டியின் முன்புறம் புதிய சக்கரம் ஒன்றை பொருத்தலாம் என நினைத்துள்ளனர்.

இது தொடர்பாக கல்லூரி பேராசிரியர்களிடம் அவர்கள் பேசியபோது அவர்களுக்கும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், மாணவர்களின் முயற்சிக்கு கோலாப்பூரில் உள்ள சிவாஜி பல்கலைக்கழகமம் நிதியுதவி செய்துள்ளது. இதுகுறித்த ஆய்வில் மாட்டு வண்டியின் முன் பகுதியில் சக்கரம் அமைத்தால் அது மாட்டுக்கு ஏற்படும் பாரத்தை குறைக்கும் என தெரிந்து கொண்டனர். பின்னர் விமானத்தில் இருக்கும் முன்பகுதி சக்கரம் போன்று மாட்டு வண்டியில் முன்பாக சக்கரத்தை பொருத்தியுள்ளனர். இது தொடர்பான செய்தி இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், இது குறித்து கூறிய மாணவர்கள், “எங்களது கல்லூரி வழியாக தினமும் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டியில் கரும்பு எடுத்துச் செல்லப்படுவதைப் பார்த்திருக்கிறோம். அப்போது மாடுகள் படும் கஷ்டத்தை பார்க்க எங்களுக்கு கஷ்டமாக இருந்தது. இதற்கு தீர்வுகாண விவசாயிகளிடம் பேசியபோது மாட்டு வண்டியின் முன்பகுதியில் மூன்றாவதாக ஒரு சக்கரத்தை பொருத்தலாம் என தோன்றியது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி இந்த ஆண்டு ஜனவரிக்குள் மாதிரியை உருவாக்கி அதனை செய்து முடித்துள்ளோம். இச்சக்கரம் எடைக்கு தக்கபடி ஏற்ற இறக்கத்துடன் ஹைட்ராலிக் முறையில் செயல்படக்கூடியது. இதன் மூலம் மாடுகளுக்கு வண்டியில் இருக்கும் எடையில் 80 சதவீதம் எடை குறையும்” எனக் கூறியுள்ளனர்.