”வழக்கமான நடைமுறையின்படியே 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும்” என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் காமராஜர், ”11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்பது போன்ற செய்தி எப்படி வெளிவந்தது? என்று எங்களுக்கு தெரியவில்லை. எங்களை பொறுத்தவரையில் எப்போதும் இருக்கக்கூடிய தேர்வு முறைதான் இருக்கும். பொதுவாக தனியார் பள்ளிகள் 11ஆம் வகுப்பு பாடத்தை நடத்தாமலேயே நேரடியாக 12ஆம் வகுப்பு பாடத்தை நடத்தி, அதில் மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைக்க வேண்டும், தங்கள் பள்ளி அதில் சிறந்துள்ளது என்று காட்ட வேண்டும் என்று சென்றுவிடுகிறார்கள்.

11ஆம் வகுப்பு பாடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போய்விட்டால், போட்டித் தேர்வுகளின் போது மாணவ-மாணவிகள் சிக்கிக்கொள்வார்கள். அதனை கருத்தில் கொண்டு தான் இந்த 11ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதுவரையில் அதனை ரத்து செய்வது தொடர்பான எண்ணம் எதுவும் இல்லை. மாணவர்கள் இந்த விஷயத்தில் குழம்ப தேவையில்லை. வழக்கமான நடைமுறையின்படியே 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும்”. இவ்வாறு அவர் கூறினார்.