1, 2ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் ( Home Work ) தரக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இதனை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் 1 மற்றும் 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது தடை விதித்துள்ள நிலையில், அதை முறையாக அமல்படுத்த வேண்டும். பள்ளிகளில் பறக்கும் படையைக் கொண்டு ஆய்வு செய்து 1, 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தராமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆய்வுக்குப் பின் வீட்டுப்பாடம் தரப்பட்டதா? இல்லையா? என்பதை அறிக்கையாக சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மாணவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டுப்பாடம் தரப்படும் போது, அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்து முடிக்குமாறு ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் கல்வித் துறை ஏற்கனவே அறிவுறுத்தியது. மாணவர்களுக்கு வழங்கப்படும் வீட்டுப்பாட விவரம், மாணவர்கள் சமர்ப்பிக்கும் விவரம் போன்றவற்றை உரியமுறையில் பராமரிக்கவும் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.