அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், ”தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி, குளம், ஆறுகளில் குளிக்க அனுமதிக்கக் கூடாது என பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.
தொடர் மழையால் பள்ளியின் சுற்றுச்சுவர் ஈரப்பதத்துடன் காணப்படலாம். ஆகையால், அதன் உறுதித்தன்மையை கண்காணிக்க வேண்டும். பழுதடைந்த சுற்றுச்சுவர் பகுதிகளைச் சுற்றி வேலி அல்லது தடுப்புகள் அமைக்க வேண்டும். மழையால் பள்ளியின் சில வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் பாதிக்கப்பட்டால், அவற்றை பயன்படுத்தாமல் பூட்டி வைக்க வேண்டும். அனைத்து மின் இணைப்புகள் சரியாக உள்ளதா? அல்லது மின் கசிவு ஏதேனும் உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
பள்ளி வளாகத்தில் உள்ள பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள் இருந்தால், அவை மூடப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்களை அப்புறப்படுத்த வேண்டும். பருவகால நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால், தாமதிக்காமல் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.
பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் இருந்தால், மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு இடிக்க வேண்டும். மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி தலைமை ஆசிரியர்கள் செயல்படுவதை முதன்மை, மாவட்டக்கல்வி அலுவலர்கள் பள்ளிப் பார்வையின்போது கண்காணிக்க வேண்டும்” என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.