பள்ளி அருகே உள்ள கடைகளில் போதை பொருள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்த ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, பள்ளி மாணவர்களிடையே நிலவும் போதைப் பொருள் பழக்கத்தை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பள்ளி மாணவர்களிடையே போதைப் பொருள் பயன்பாடு உள்ளதா? என்பதை கண்டறிய ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ”பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் ‘கூல் லிப்’ (Cool Lip) போன்ற போதைப் பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். மேலும், இது தொடர்பாக மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அப்போது மாணவர்களின் பற்களில் கறை உள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும் வாரத்தின் முதல் நாளில் காவல்துறை ஆய்வாளர், உளவியல் நிபுணரை அழைத்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். தேவையான மாணவர்களுக்கு மனநல ஆலோசனையும் வழங்கலாம். பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் போதை பொருள் விற்பனை செய்யப்படுவது தெரிந்தால், இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்”என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.