ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் முதல் அணியாக ஃபிளே ஆப்-க்குள் நுழைந்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.
16-வது ஐபிஎல் தொடரி 62வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்தது. இதன்படி, குஜராத் அணியில் முதலில் களமிறங்கிய சுப்மன் கில் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை பறக்கவிட்டு சதமடித்தார். அவருடன் இணைந்து சாய் சுதர்சன் 47 ரன்கள் குவித்தார். முடிவில், குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய ஹைதராபாத் அணி வீரர்கள் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து வந்தனர். குஜராத் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க இயலாததால் ஹைதராபாத் அணி வீரர்கள் சொற்ப ரங்களிலே ஆட்டமிழந்தனர். ஆனால், ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக விளையாடி சிக்ஸர்கள், பவுண்டரிகள் என பறக்கவிட்டு அரைசதம் கடந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து புவனேஷ்வர் குமார் பொறுப்பாக விளையாடினார். முடிவில், ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் குஜராத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 64 ரன்களும், புவனேஷ்வர் குமார் 27 ரன்களும் குவித்துள்ளனர். குஜராத் அணியில் முகமது ஷமி, மோஹித் ஷர்மா தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி முதல் அணியாக நடப்பு ஐபிஎல் தொடரில் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இன்னும் 3 அணிகள் பிளேஆப் சுற்றுக்கு செல்வதற்கு, மீதமுள்ள அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றன. மேலும் ஹைதராபாத் அணி 3-வது முறையாக பிளேஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தவற விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.