சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் வாரிசு சான்றுகள் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விதிகளை வகுத்து அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், தனது சகோதரர் சந்தானத்துக்கு வாரிசு இல்லை என்றும், அவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், அவரது சொத்தை மீட்கவும், வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்கவும் தனது சகோதர, சகோதரிகளை வாரிசுகளாக அறிவித்து சான்று வழங்கக் கோரி அளித்த விண்ணப்பம், 2022 அரசாணையை சுட்டிக்காட்டி நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தைகளும், மனைவியும் இல்லாத ஆணின் சகோதரர், சகோதரிகளை வாரிசுகளாக இந்த அரசாணையில் சேர்க்கப்படவில்லை என்பதால், இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சேஷசாயி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசின் அரசாணை இந்து வாரிசு உரிமை சட்டத்திற்கு விரோதமாக அமைந்துள்ளதால், இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ். வீரராகவன் வாதிட்டார். இதையடுத்து மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.