விசாரணைக்கு ஆஜராகாத அமைச்சர் ரோஜாவின் கணவரும் இயக்குனருமான ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே.செல்வமணி மற்றும் காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் அன்பரசு ஆகியோர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்திருந்தனர். அதில், பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து சில கருத்துக்களையும் கூறியிருந்தனர். இதையடுத்து, அவர்கள் இருவர் மீதும் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை முகுந்த்சந்த் போத்ரா நடத்தி வந்த நிலையில், அவர் இறந்துவிட்டதால், தற்போது அவர் மகன் ககன் போத்ரா நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இந்த வழக்கு 15-வது மாஜிஸ்திரேட் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.கே.செல்வமணி ஆஜராகவில்லை. மேலும், அவரது தரப்பு வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்த நீதிமன்றம், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.