தொடர் மழையால் வைகை அணை நிரம்பியுள்ளது. உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் மிகப் பெரியளவில் மழை பெய்தது. தொடக்கத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டியது. மாத இறுதியில் தென் மாவட்டங்களில் அதீத கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் உள்ள நீர் நிலைகளிலும் தண்ணீர் நிரம்பியது.
இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே தேனி, திண்டுக்கல் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இப்படி தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் வைகை அணை முழு கொள்ளளவான 71 அடியை எட்டியுள்ளது. அணைக்கு இப்போது நீர்வரத்து வினாடிக்கு 3,100 கன அடியாக உள்ள நிலையில், அது அப்படியே உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. வைகை அணையில் உள்ள பெரிய பிரதான 7 மதகுகள் மூலம் 3,100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை கரை பகுதிகளில் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ அல்லது ஆற்றில் இறங்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சைரன் மூலம் ஒலி எழுப்பியும் எச்சரிக்கை விடுத்தும் கரையேறும் இருக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரித்து வருகிறது.