திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு அவ்வப்போது உடல்நல பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த மாத இறுதியில் திடீர் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். துரைமுருகன் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படவே அவர் மருத்துவமனையில் இருந்து மறுநாளே வீடு திரும்பினார்.

இந்நிலையில், இன்று அதிகாலையில் மீண்டும் உடல் நல பாதிப்பு ஏற்படவே துரைமுருகன் மீண்டும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான காய்ச்சல் உள்ளதாகவும் அவர் ஓய்வெடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வயோதிகம் காரணமாகவே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.