தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் மாநில முதலமைச்சருமான சரத் பவாருக்கு இன்று காலை உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சரத் பவாரை தொடர்பு கொண்டு அரசியல் தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர். தற்போது சரத் பவார் உடல்நிலை சீராக உள்ளதாகவும், வருகிற நவம்பர் 2ஆம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’நவம்பர் 4, 5ஆம் தேதிகளில் ஷீரடியில் நடைபெறும் கட்சியின் முகாம்களில் அவர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 81 வயதாகும் சரத்பாவருக்கு கடந்த ஆண்டு பித்தப்பை பிரச்சனை இருப்பதாக கண்டறியப்பட்டு , 15 நாட்கள் தொடர் மருத்துவமனை கண்காணிப்பிற்கு பிறகு பித்தப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.