நாமக்கல்லில் பள்ளி மாணவன், கழிவறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அரசுப் பள்ளியில் கவின்ராஜ் (14) என்ற மாணவன், 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில், மாணவன் கவின்ராஜ், நேற்று பள்ளியின் கழிவறையில் மர்ம மரணமான முறையில் இறந்து கிடந்தான். இதனைப் பார்த்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். இதையடுத்து, மாணவனின் மரணத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தற்போது இந்த வழக்கில் திடீர் திருப்பமாக மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சக மாணவன் தாக்கியதில் கவின்ராஜ் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகாத வார்த்தையால் திட்டி சண்டையிட்டதால், அப்போது நிகழ்ந்த சம்பவத்தில் மாணவன் கவின்ராஜ் உயிரிழந்துள்ளார் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இரு மாணவர்கள் தாக்கிக் கொண்டதை மற்ற மாணவர்கள் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, கவின்ராஜை தாக்கிய சக மாணவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.