நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான் – 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஜூலை 14ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு இந்த விண்கலம் விண்ணில் பாய்ந்தது. சில நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து சந்திரயான்-3 வெற்றிகரமாக பிரிந்து, புவி சுற்றுவட்டாரப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே, நிலவுக்கு மிக நெருக்கமான, இறுதிக்கட்ட சுற்றுப்பாதையில் வலம் வரும் சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து லேண்டா் கலன் இன்று விடுவிக்கப்படுகிறது. இந்த பணி வெற்றிகரமாக நிறைவடைந்த பிறகு, லேண்டரின் வேகம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, நிலவில் வரும் 23ஆம் தேதி தரையிறக்கப்படவுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவும் லுனா 25 என்ற விண்கலத்தை நிலவின் ஆராய்ச்சிக்கு அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் கடந்த 11ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. வெறும் 5 நாட்களில் நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் லுனா 25 விண்கலம் நுழைந்துள்ளது. வரும் 21ஆம் தேதி இந்த விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.