கோடை விடுமுறை வர இருப்பதால் வெளியூர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், பொதுமக்கள் பலரும் தங்களது சொந்த ஊருக்குத் திரும்புவது குடும்பத்துடன் சுற்றுலா செல்வது வழக்கம். இந்நிலையில், கோடை விடுமுறையை ஒட்டி, பொதுமக்களின் வசதிக்காக, சுமார் 500 சிறப்பு பேருந்துகளை சென்னையில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூறுகையில், கோடை விடுமுறை வர இருப்பதால் பொதுமக்கள் பலரும் அதிகமாக வெளியூர் செல்வார்கள் என எதிர்பார்க்கிறோம். ஆகவே, ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது வாரம் முதல், தேவைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளோம்.
சென்னையில் இருந்து இயக்கப்படும் 2,200 பேருந்துகளோடு, 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பேருந்துகளை அதிகமாக இயக்க உள்ளோம். மேலும், http://www.tnstc.in/ என்ற இணையதளத்தின் வழியாக, டிக்கெட் முன்பதிவும் செய்து கொள்ளலாம்.