புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தின் 2022-23 ஆம் ஆண்டிற்கான ரூபாய் 10,696 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அதில், குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம் நடத்தப்படும் குறைதீர்ப்பு கூட்டங்களுக்கு அதிகளவில் வரவேற்பு உள்ளதால் குறைதீர்ப்பு கூட்டத்தை அதிகளவில் நடத்த ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தார். மேலும், உர விற்பனை அதிகரிக்கக் காரைக்காலில் விற்பனை மையங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலை தனியார் பங்களிப்புடன் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வித்துறையுடன் உள்ள விளையாட்டு, இளைஞர் நலன் துறை தனியாகத் துவங்கப்படும் என அறிவித்தார்.

மேலும் இலவச பாடப் புத்தகங்கள், சீருடை, மதிய உணவு போன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அரசுப் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் பொலிவுறு வகுப்புகளாக மாற்றப்படும் என்றும் அறிவித்தார். தடையில்லா மின் விநியோகம் வழங்கப்படும் என்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 வழங்கப்படும் என்றும் இந்தத் தொகையானது 21 வயது முதல் 57 வயது வரையிலான குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.