புதுச்சேரி சட்டப்பேரவையில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணக் குமார், சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “குடிமைப் பொருள் வழங்கல் துறையில் ரேஷன் கார்டு சேவைகளுக்கு பிரத்யேகமாக மத்திய அரசின் பொது சேவை மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார். ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு புதிய திட்டப்படி இலவச அரிசி, மானிய சர்க்கரை, சிறுதானியங்கள் தரப்படும். கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட தானியங்கள் மானிய விலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும். குடிமைப் பொருள் வழங்கல் துறையில் மக்கள் குறைகளை கேட்க கால் சென்டர் இந்தாண்டு அமைக்கப்படும். மாவட்ட, மாநில நுகர்வோர் குறைதீர் மையம் அமைக்கப்படும்.
4,263 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 25 கோடி மத்திய அரசிடம் பெற்று ரூ. 17.5 கோடி கடன் தரப்பட்டுள்ளது. 814 புதிய சுயஉதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 10 குழுக்கள் மூன்றாம் பாலினத்தவர்கள். அவர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் சுழல் நிதி தரப்பட்டது” என்றார். இதையடுத்து, பாஜக, என்.ஆர்.காங்கிரஸார் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் எழுந்து, குடிமைப் பொருள் வழங்கல் துறையில் எதிர்ப்பு தெரிவித்த அதிகாரியை மீண்டும் அங்கு பணியமர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவையில் கூச்சல் எழுந்தது. இதையடுத்து, அந்த துணை இயக்குநர் அதிகாரியை உடனே மாற்றுவதாக அமைச்சர் சாய் சரவணன் குமார் உறுதியளித்தார்.